mathan |
12:11 PM |
0
comments
இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்கள் பட்டியலில் பிரபு சாலமோனும் இணைந்திருக்கிறார். காதலனும் காதலியும் உயிருக்கு உயிராக காதலித்து கடைசியில் காதலுக்காக உயிரைவிடுகிற உருக்கமான காதல் கதை தான் என்றாலும், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதைக் களம் மைனா.
மேக்கப் இல்லாத முகங்கள், புதுமையான லொகேஷன், வித்தியாசம் என்கிற வார்த்தைக்கு மரியாதை செய்கிற வகையில் ஒரு க்ளைமாக்ஸ் என மைனா தமிழ் சினிமாவின் புது முயற்சிகளில் முக்கியமான படைப்பாக விளங்குகிறது.
தீபாவளிக்கு முன் தினம்... போலிஸ் அதிகாரிகள் பாஸ்கர், ராமைய்யா இருவரும் தப்பி ஓடிய கைதி சுருளியை தேடி தேனி அருகில் மூணாறு மலை அடிவாரத்தில் இருக்கும் குரங்கணி மலைக் கிராமத்துக்கு போகிறார்கள். தப்பி ஓடிய சுருளி யாரு?
சுருளி சின்ன வயசுல பள்ளிக்கூடம் போகாமல் ரவுடித்தனம் செய்கிறார். தன் அம்மாவுடன் மைனா நடுத்தெருவில் அழுதுகொண்டிருக்க, அவர்களை கூட்டி வந்து அடைக்கலம் கொடுக்கிறார். மைனாவும் சுருளியும் காதல் பறவைகளாய் குரங்கணி மலையில் வளம் வருகிறார்கள். மைனாவுக்கு கல்யாண வயசு வருகிறது. மைனாவும் சுருளியும் காதலிக்கிற விஷயம் மைனாவின் அம்மாவிற்கு தெரியவர, மைனாவிற்கு வேறொரு மாப்பிளை பார்க்கிறார்.சுருளியும் பணியாரக் கடைக்காரி மைனாவின் அம்மாவும் முடியைப்பிடித்து சண்டைப் போடும் அளவற்கு பெரிய ரகளை நடக்கிறது.
இந்தப் பிரச்சனையில் சுருளி சிறையில் அடைக்கப்படுகிறார். மைனாவிற்கு கல்யாண வேலைகள் நடந்து கொண்டிருக்க, செய்தி அறிந்ததும் சுருளி சிறையில் இருந்து தப்பி வருகிறார். தலை தீபாவளி கூட கொண்டாடாத கடுப்பில் ஜெயில் அதிகாரி பாஸ்கரும், ராமையாவும் சுருளியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் குரங்கணி கிராமத்திற்கு போக மலை ஏறுகிறார்கள். ரத்திரியாகிவிட மலையில் வழி தெரியாமல் அலைந்து திரிந்து பல சிரமங்களுடன் ஒரு வழியாக அடுத்த நாள் காலை சுருளியை கைபற்றுகிறது போலிஸ். சுருளி போலிசுடன் வரும்போது மைனாவும் சுருளியுடன் வந்துவிடுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் சுருளி ஜெயிலுக்கு போய்விடுவார், அப்போ மைனா? இந்த இடத்தில் இடைவேளை...
மீண்டும் மலையில் பாதை தெரியாமல் போய்விடுகிறார்கள், ஒரு கட்டத்தில் போலிஸ் அதிகாரிகள் பாஸ்கரையும் ராமையாவையும் பஸ் விபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் சுருளி. உயிரைக் காப்பாற்றிய அக்யூஸ்ட் சுருளி போலிசுக்கு கடவுளாக தெரிகிறார். சுருளி விடுதலையானதும் தானே கல்யாணம் செய்து வைப்பதாக சொல்கிறார் போலிஸ் பாஸ்கர். நிறைவான சந்தோஷத்தோடு தேனி வந்தடைய... ஒரு கொடுமையான க்ளைமாக்ஸ்! நீங்கள் எதிர்பார்ப்பது எதுவுவே கிளைமாக்ஸாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு சஸ்பென்ஸ்.
படம் பார்த்த ராத்திரி தூங்கவிடாத க்ளைமாக்ஸ்களில் இதுவும் ஒன்று. படத்தின் ஒரு காட்சிக் கூட காரணம் இல்லாமல் காட்டப் படவில்லை. படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் ஒரு காரணத்தோடவே காட்டப்படுகிறது.
சுருளியாக வரும் வித்தார்த், மைனாவாக வரும் அமலா பால் என எல்லோரும் கதா பாத்திரமாகவே வாழ்ந்திருகிறார்கள். ராமைய்யாவாக வரும் தம்பி ராமைய்யாவிற்கு ஒரு தனி பாராட்டு. காமெடி, வில்லத்தனம், கண்ணீர் என எல்லாம் கலந்த குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் முத்திரைப் பதித்திருகிறார். போலிசாக வரும் சேது, புதுமுகமாக இருந்தாலும் நூறு படத்தில் நடித்தது மாதிரி நடிப்பில் அப்படி ஒரு முழுமை.
படத்தின் முக்கியமான ஒருவர்களில் டி.இமான் ஒருவர். டி.இமான் இசையமைத்த படங்களில் தி பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு தூள். இன்று முதல் முக்கியமான இசையமைப்பாளர்கள் பட்டியலில் டி.இமானும் ஒருவர். இவரின் மைனா இசை எல்லாருடைய நெஞ்சுக்குள்ள வம்புபண்ண போகுது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மலையில் இருந்து பஸ் விழும் காட்சி! படத்தின் உச்சக்கட்ட காட்சி இதுதான். படத்தைப் பார்க்கும் நாமே மலையில் தொங்கும் ஒரு உணர்வு. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு இந்த ‘மைனா’ உலகத்தை காண்பித்ததற்காக ஒரு சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்.
சமீபமாய் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் சொந்தப் படம் எடுத்தால் தான் நல்ல படைப்புகள் உருவாகும் நிலை உள்ளது. ஆனாலும் இந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்திருக்கும் தயாரிப்பாளர்களை மறந்துவிட முடியாது. மைனாவை இன்னும் உயரப் பறக்கச் செய்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏ.ஜி.எஸ். சகோதரர்களுக்கு ஒரு சல்யூட்.
இனி வரும் படங்களிலும் தன் தரத்தைத் தக்கவைத்துக் கொள்ள பிரபு சாலமோனுக்கு வாழ்த்துகள்.
மைனா - தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒன்று!
மற்ற ஒரு நண்பரின் விமர்சனத்தையும் பாருங்க
கதைச்சுருக்கம்
விவரம் தெரிந்த வயதில் இருந்து ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்களின் கதை. கதை தேனீ மாவட்டம் குரங்குனி என்ற மலைக்கிராமத்தில் ஆரம்பிக்கிறது. மனைவியையும் சிறுவயது மகளையும் (நாயகி) ஒரு குடிகார கணவன் கைவிட்டுவிட அவர்களது தனக்கு தெரிந்த பாட்டியின் மூலம் அடைக்கலம் கொடுக்கிறான் ஒரு சின்னப்பையன் (நாயகன்). நாளடைவில் சிறுவர்கள் வளர அவர்களது காதலும் வளர்கிறது. பின்பு ஒருநாள் நாயகனும் நாயகியும் முத்தம் கொடுத்துக்கொள்வதை நாயகியின் அம்மா பார்த்துவிடுகிறார். காதலுக்கு தடையாய் இருக்கும் அவரை நாயகன் அடிக்க வர போலீஸ் அவரை கொலைமுயற்சி கைது செய்து 15 நாள் சிறையில் அடைக்கிறது. விடுதலையாக 2 நாட்களே உள்ள நிலையில் நாயகிக்கு அவரது தாய் வேறு திருமண ஏற்பாடு செய்ய நாயகன் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து வந்து நாயகியை மீட்டேடுக்கிறார். அதே சமயம் நெருக்கடியான சூழலில் இருக்கும் போலீசார் மீண்டும் நாயகனை கைது செய்ய அதன் பிறகு நடக்கும் திருடன் – போலீஸ் விளையாட்டே கதை. இதற்கு மேல கதையை சொல்லி உங்கள் சுவாரஸ்யத்தை கெடுக்க விரும்பவில்லை.
தீபாவளியும் தீபாவளிக்கு முந்தைய நாள் நடக்கும் சம்பவங்களே கதை. வழக்கமான தமிழ் சினிமா கிராமத்து காதல் கதைகளைப் போலவே படம் ஆரம்பிக்கிறது. ஹீரோ சிறையில் இருந்து தப்பித்து வந்தபிறகே படம் சூடுபிடிக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே சிறுவர்கள் விளையாட பந்துக்கு காசு கொடுக்கும் காட்சியில் போலீஸ் அதிகாரியின் குணத்தையும், தனது அண்ணிகளை எல்லாம் நாசூக்காக புடவை மாற்ற வைக்கும் காட்சியில் போலீஸ்காரரின் மனைவியின் குணத்தையும் காட்டிவிடுகிறார்கள். இடைவேளை வரை சாதாரண ஒரு தமிழ் படமாக கதை நகர, இரண்டாம் பத்தியில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
நாயகன்
விதார்த் – தொட்டுப்பார் படத்தில் அறிமுகமானவர். நடிப்பில் பெரிய சிகரங்களை தொடாவிடிலும் தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆரம்பத்தில் சண்டித்தனம் செய்யும் கிராமத்து ஆளாக அறிமுகமாகிறார். ஆங்காங்கே சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறார். உதாரணத்துக்கு “எந்த மகராசன் தூக்கிட்டு போகப்போறானோ...” என்று நாயகியைப் பார்த்து ஒரு பெண்மணி சொல்ல அந்தப் பெண்ணிற்கு குட்டு வைக்கும் காட்சி.
நாயகி
அமலா – ஏற்கனவே சிந்து சமவெளி படத்தில் அனாகாவாக அறிமுகமானவர். ஆனால் இந்தப் படத்திலும் அறிமுகம் என்றே போடுகிறார்கள். இந்தப் படத்தில் மேக்கப் இல்லாமல் நடித்திருப்பதால் அதிகம் ரசிக்க முடியவில்லை. மற்றபடி அமலா ஓர் பேரழகி. சில நாட்களுக்கு முன்பு விஜய் டிவியில் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இந்தக் கூற்றை மறுக்க மாட்டார்கள். பார்ப்பதற்கு கொஞ்சம் தமன்னா சாயலில் இருக்கும் இவர் நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்.
தம்பி ராமையா
சில்லுனு ஒரு காதல் உட்பட பல படங்களில் வடிவேலுவுக்கு எடுபிடியாக நடித்தவர். இவர் தான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை எடுத்தவர் என இன்றுதான் தெரிந்துக்கொண்டேன். ஜெயில் வார்டன் கேரக்டரில் நடித்திருக்கிறார். நாயகன் நாயகிக்கு அடுத்தபடியாக அல்லது அவர்களுக்கு இணையான கேரக்டர் என்று சொல்லலாம். காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குகிறார். நடிப்பில் ஆங்காங்கே வடிவேலுவின் சாயல் தெரிக்கிறது. உதாரணத்துக்கு, காட்டில் புலி படத்தை பார்த்து பயப்படும் காட்சி.
மற்றும் பலர்
இவர்களைத் தவிர முக்கிய கேரக்டர் என்று பார்த்தால் போலீஸ் அதிகாரியாக வரும் சேது. ஜஸ்ட் லைக் தட் சிறப்பாக நடித்திருக்கிறார். உதாரணம் பேருந்து விபத்துக்காட்சி. இது தவிர பெயர் தெரியாத சில நடிக நடிகையர். நாயகனின் தந்தை, நாயகியின் தாய், போலீஸ்காரரின் மனைவி என்று அனைவருமே அவரவர் வேலைகளை சரியாக செய்திருக்கிறார்கள்.
இசை
இமான் இசை அமைத்திருக்கிறார். பின்னணி இசையை பொறுத்தவரையில் சொதப்பல் என்றே சொல்லலாம். ஆனால் பாடல்கள் ஓரளவிற்கு சுமார் ரகம். “ஜிங்கி ஜிங்கி...” என்று ஆரம்பிக்கும் பாடல் குத்துப்பாடல் இல்லாத குறையை தீர்க்கிறது. மற்ற பாடல்களில் “நீயும் நானும்...” என்று ஆரம்பிக்கும் பாடலும் “கையப் புடி...” என்று ஆரம்பிக்கும் பாடலும் மனதில் நிற்கிறது.
இன்ன பிற
படத்தின் ஒளிப்பதிவாளரை பாராட்டியே ஆகவேண்டும். மலைவழிச்சாலையில் கதை பயணிப்பதால் புகுந்து விளையாடி இருக்கிறார். வசனங்களில் ஆங்காங்கே “பளிச்” தெரிகிறது. ஆனால் “அட்ராசக்க” ஸ்டைலில் வசனங்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்து பதிவு போட முடியவில்லை.
எனக்குப் பிடித்த காட்சி
பஸ் விபத்து காட்சி – நாயகன், நாயகி, இரண்டு போலீஸ் அதிகாரிகள், சக பயணிகள் உட்பட மலைச்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கையில் பஸ் மலையில் இருந்து தவறி விழப்போக எப்படியோ விழாமல் விளிம்பில் நிற்கிறது. பேருந்தில் இருந்த அனைவரும் தப்பித்துவிட இரண்டு போலீஸ் அதிகாரிகள் மட்டும் பஸ்சில் சிக்கித் தவிக்கிறார்கள். அதிலும் சேதுவின் நிலை ரொம்பவும் மோசம். ஒரு கண்ணாடி மீது படித்திருக்கும் அவர் கொஞ்சம் அசைந்தால் கூட கண்ணாடி கிழிந்து அதலபாதாளத்தில் விழுந்து விடும் அபாயம். அப்போது நாயகன் அவர்களைக் காப்பாற்றும் காட்சி அருமை. காட்சி அமைப்பு, வசனம் இரண்டிலும் என் மனதில் நின்ற காட்சி இதுதான்.
சில குறைகள்:
- நாயகி பூப்பெய்தும் காட்சி. இத்தகைய காட்சிகளை தமிழ் சினிமாவில் காமெடிக்காக பயன்படுத்துவது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.
- நாயகி தேர்வுக்கு படிக்க வெளிச்சமில்லாத பொழுது நாயகன் மின்மினிப்பூச்சிகளை பாட்டிலில் போட்டு கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர்.
- சோகமான க்ளைமாக்ஸ் தான் வைப்பேன் இன்று இயக்குனர்கள் ஏன்தான் அடம பிடிக்கிறார்களோ...?
தீர்ப்பு
ஏற்கனவே தமிழ் சினிமாவில் இதே போன்ற உருக்கமான திரைப்படங்கள் நிறைய வந்து இருப்பதால் இந்த படத்தை மக்கள் ரசிப்பது கஷ்டம். நெகட்டிவான க்ளைமாக்ஸை தவிர்த்து இருக்கலாம். சில காட்சிகளில் பாலு மகேந்திராவின் “அது ஒரு கனாக்கலாம்” திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது. காதலில் இருப்பவர்கள் என்றால் ரசிக்கலாம். மற்றவர்கள் ஒருமுறை பார்த்துவிட்டு வரலாம். யாராவது படத்தை பார்க்க முடிவு செய்திருந்தால் தயவுசெய்து தனியாக சென்று பாருங்கள். நான்கைந்து நண்பர்களோடு சென்று கலாட்டா செய்தபடி பார்ப்பதெல்லாம் படத்தின் மீது தவறான புரிதலையே ஏற்படுத்தும்.
படம் நன்றாக இருக்கிறது – ஆனால் ஓடாது (ங்கொய்யால நம்ம ஜனங்க என்னைக்கு நல்ல படங்களை ஓட வச்சிருக்காங்க)
நன்றி:N.R.பிரபாகரன்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து வாக்களித்து இப்பதிவு பலரை சென்றடைய உதவும் நண்பர்களுக்கு நன்றி ... என்னால் முடிந்த அவசியமான தகவல்களை தர இது உதவும் உங்கள் மேலான ஆதரவு வேண்டி ...
மீண்டும் ஒரு தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்
நன்றி !
மதன்
Category:
THIRAI VIMARSANAM
0 comments