டாக்டர் அம்பேத்கர் 2010 - திரை விமர்சனம்

எல்லோருக்கும் தெரிந்த அம்பேத்கரின் வாழ்க்கை தான் படம் முழுக்க சொல்லப்படுகிறது; என்றாலும், அது ஒரு ஆவணப்படமாக இல்லை; எல்லா தரப்பு மக்களுக்கும் ஒரு உண்மையை பொட்டில் அடித்த மாதிரி சொல்லும் படம். இயக்குநர் ஜப்பார் பட்டேலுக்கு பாராட்டுக்கள்.
சிறு வயதில் தன் சகோதரனுடன் மாட்டு வண்டியில் பயணமாகும் போது, அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று தெரியவந்ததும், சிறுவர்கள் என்று கூட பார்க்காமல் வண்டிக்காரரால் வண்டியிலிருந்து தள்ளிவிடப்படும் கொடுமை, பரோடா மன்னரின் உதவித் தொகையில் அமெரிக்காவுக்குப் படிக்கப் போவது, பின்னர் லண்டனுக்கு சட்டம் படிக்கப் போவது, அங்கே தாழ்த்தப்பட்டவன் என்பதற்காக அவமானப்படுத்தப்படுவது, பரோடா சமஸ்தானத்தில் உயர் பதவி கிடைத்தும் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக வீடு கொடுக்காமல்,குடிக்க நீர்கூட கொடுக்காமல் அவமானப்படுத்தப்படுவது, இந்தக் கொடுமைகளுக்கு எதிராக தாழ்த்தப்-பட்டவர்களை ஒன்று திரட்டி பொதுக் குளத்தில் அவர்களை நீர் அருந்தச் செய்வது, கோயில் பிரவேசம் செய்ய வைப்பது என்று அம்பேத்கர் பட்ட துயரங்களும் செய்த புரட்சிகளும் நம் கண்முன் வந்து மனதை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது.
அம்பேத்கர் பாத்திரத்திற்கு மம்முட்டி நல்ல தேர்வு. தான் தாழ்த்தப்பட்டவன் என்பதை நினைத்து அவர் அழும் காட்சிகள், வட்டமேசை மாநாடுகளில் அவர் ஆற்றும் உரை, காந்தியுடன் முரண்பட்டுப்போய் அவர் செய்யும் விவாதங்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக உழைக்கப் போய் தன் பிள்ளைகளையும், மனைவியையும் இழக்கும் தருணங்கள், தங்கள் இனம் விடுதலை பெற ஒரே வழி மதம் மாறுவதுதான் என்ற அவரது வாதம்,இந்து திருமணச் சட்டம் நிறைவேறாது போகவே தன் பதவியை ராஜினாமா செய்வது என்று ஒவ்வொன்றிலும் அம்பேத்கராகவே வாழ்ந்து காட்டியிருகிறார் மம்முட்டி. அதற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருப்பது கூடுதல் கௌரவம்.
அம்பேத்கரின் மனைவி ராதாபாய்,அவரது இரண்டாவது மனைவியாக வரும் பெண் டாக்டர், அம்பேத்கர் என்ற மேதை உருவாகக் காரணமாக இருந்த பரோடா மன்னர், அம்பேத்கரின் நண்பர்கள், காந்திஜி பாத்திரம் என்று எல்லாமே செய் நேர்த்தியாக செயல்பட்டு, அம்பேத்கர் படத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
படம் முழுக்க அம்பேத்கர் கண்ணோட்டத்திலேயே நகர்கிறது.அதனால் காந்தியுடனான முரண்பாடுகள் அதிகம்.‘‘காந்திஜி அடிக்கடி நீங்க உண்ணாவிரதம் இருக்காதீங்க.உண்ணாவிரதம் என்கிற ஆயுதம் கூர்மங்கிப் போகும். நீங்களும் இல்லாமப் போயிடுவீங்க. நீங்க இந்த நாட்டுக்குத் தேவைப்படலாம்’’ என்று பல நறுக் வசனங்கள் துணிச்சலான செயல்கள். படத்தை தமிழ்ப்படுத்தியவர்கள் பின்னணிப் பாடல்களையும் தமிழிலேயே தந்திருக்கலாம். இந்தியில் வந்து புரியாமல் போகிறது.
அமெரிக்கப் பல்கலைக்கழகம், லண்டன் சட்டக் கல்லூரி, தாழ்த்தப்பட்ட மக்களின் இருண்டு போன வாழ்க்கை,மேல் சாதியினருடன் அவர்களுக்-கான சண்டை என்று ஒவ்வொன்றையும் காட்சிப் படுத்தியிருக்கும் விதம் அருமை. ஒளிப்பதிவாளர் நம்மை அம்பேத்கர் காலத்திற்கே அழைத்துச் செல்கிறார்.
2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம். தமிழில் இவ்வளவு காலம் தாழ்த்தியா வரவேண்டும்? தியேட்டர் கிடைக்கவில்லை, போதிய பண உதவி இல்லை என்று சொல்வதெல்லாம் வெறும் சால்ஜாப்புகள். தீண்டத் தகாதவர்களுக்காக போராடிய ஒரு வரலாற்றுத் தலைவனின் படம், இங்கே தீண்டத்தகாத படமாக ஆகிவிடக்கூடாது..


Category: THIRAI VIMARSANAM
0 comments