RATHA CHARITHIRAM ரத்த சரித்திரம் 2010 - THIRAI VIMARSANAM திரை விமர்சனம்
உண்மையில் நடந்தது என்ன என்று சம்பவங்களின் போது பல மர்மங்கள் நீடித்த நிலையில், படத்தில் சொல்லப்பட்ட கதையை பார்ப்போம்.
சினிமாவை தன் அரசியல் சக்தியாக மாற்றிய நடிகர் சிவராஜ் ( என்.டி.ஆராக சத்ருஹன் சின்ஹா). தேர்தலில் சிவராஜ் வெற்றியடைய முழு பலம் விவேக் ஓபராய். அரசியல் செல்வாக்கோடு அசைக்க முடியாத சிம்மாசனதில் இருப்பவன் விவேக் ஓபராய். அவனை எதிர்த்து நின்று பேசவும் யாருக்கும் தைரியம் இல்லை என்ற நிலை. சூர்யா விவேக் ஓபராயை கொல்ல மாஸ்டர் ப்ளான் போடுகிறார். சூர்யாவின் ப்ளான் தோல்வியில் முடிய, விவேக் ஓபராய் தப்பித்து விடுகிறார்.
சூர்யாவின் வீட்டில் டி.வி. பாம் வைத்து மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டியது விவேக் ஓபராய். ஏன்? எதனால்? சூர்யாவின் தம்பி அவர் மீது கொலை வெறியோடு திரிந்ததினால்... அது எதனால்? சூர்யாவின் அப்பாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததினால். அது எதற்காக? சூர்யாவின் அப்பா, விவேக் ஓபராயின் அப்பாவையும் அண்ணனையும் கொடூரமான முறையில் கொலை செய்யக் காரணமாய் இருந்ததினாலே...
அது எதற்காக என்று மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது? சூர்யாவின் அப்பாவும் விவேக் ஓபராயின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். ஒருவருக்கொருவர் அன்பாய் இருந்தவர்கள், இது பிடிக்காமல் இருவரையும் பிரிக்க சூழ்ச்சி செய்தது நாகமணி கதாபாத்திரத்தில் வரும் கோட்டா சீனிவாச ராவ். இந்தச் சூழ்ச்சி தான் நடந்த எல்லா ரத்த கொடுமைகளுக்கும் காரணம்.
சிறையில் இருந்த படியே சூர்யா போடும் ப்ளான் என்ன, சூர்யா எப்படி விவேக் ஓபராயை கொலை செய்கிறார் என்பதையும் அதன் பிறகு சூர்யா எந்த நிலைக்கு ஆளாகுகிறார் என்பதையும் தெளிவான காட்சிகளோடு சொல்லி முடிக்கிறார் ராம் கோபால் வர்மா.
இதில் பலருக்கும் பல விமர்சனங்களும் கேள்விகளும் இருக்கிற நிலையில், இதை ஒரு சினிமாவாக ராம் கோபால் வர்மா எப்படி கையாண்டிருக்கிறார் என்பதே நாம் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம். சினிமா விதிகளை எல்லாம் ஓரம் தள்ளி விட்டு தன் வழக்கமான ஸ்டைலில் வித்யாசமாகவே கையாண்டிருக்கிறார் ரா.கோ.வ. படத்தின் முதல் ஷாட் தொடங்கி கடைசி காட்சி வரை ரத்தம்!
சூரி கதாபாத்திரத்தை சூர்யாவைத் தவிர இளம் கதாநாயகர் யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது என்பதே உண்மை. கண் அசைவுகளில் மிரட்டி இருக்கிறார்.
சிறைக்குள் நடக்கிற சண்டைக் காட்சிகள் எதார்த்தமாகவும் மிரட்டலாகவும் இருக்கிறது. விவேக் ஓபராயும் விட்டுக் கொடுக்காமல் நடித்திருக்கிறார்.
ப்ரியாமணி சில காட்சிகளுக்கு வந்தாலும் நச்சுனு நெஞ்சில் நிற்கிற மாதிரி கதாபாத்திரம். டி.வி.பாமில் சிதரிக் கிடக்கிற அம்மா, தங்கை, தம்பியை பார்க்கிற சூர்யா ரத்தம் சொட்ட சொட்ட தலையை சுவற்றில் இடித்தபடி அழுகிறார், அவருடன் ப்ரியாமணியும் அழுகிறார்... இந்தக் காட்சியில் இரண்டு பேருமே சிறந்த நடிகர்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
காட்சிக்கு காட்சி ரத்தத்தை சூடாக்குகிற தரம் - சந்தீபின் பின்னணி இசை... சில இடங்களில் அதிக இரைச்சல். அமோல் ரத்தோட் - ஒளிப்பதிவு.உண்மையான சம்பவங்களை கேமராவுக்குள் கொண்டுவர ரொம்பவே சிரமப்பட்டிருகிறார். ரத்தத்தை படமாக்கி கேமராவே சிவப்பாக மாறியிருக்கும் போலிருக்கிறது.
ஒவ்வொரு வசனங்களிலும் ஒரு கோடி கோபம். கதாபாத்திரங்களுக்கு வசனத்தால் இன்னும் ரத்தம் சேர்த்திருகிறார்கள் ஞானவேல் - பரத்குமார். விவேக் ஓபராய், சூர்யாவிடம் நீ என்னை கொல்வியா? அது முடியுமா? என கேட்க, அதற்கு சூர்யா, “முடியும். ஏன்னா நான் சாவுக்கு பயப்படலை,” என சொல்லும் வசனம் நச்.
படத்தை கதையாக சொல்லும் பின்னணி குரல் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். கௌதமின் குரலில் ஆழமான கோபம், அளவான உணர்ச்சி, அழகான தமிழ்.
இரண்டு அரசியல் சாம்ராஜ்ஜியதிற்கு இடையே நடந்த ரத்த வெறி கலந்த பழிவாங்கும் போராட்டம். இதை சொல்லும் தைரியம் ராம் கோபால் வர்மாவிற்கு மட்டுமே இருந்திருக்கிறது. இது உண்மை சம்பவமாக இருந்தாலும்... ஒரு காட்சி கேமராவுக்குள் கொண்டுவரப் பட்டாலே அது சினிமாவாகவே மாறிவிடுகிறது.
ஆனால் காட்சிகளை நம்பகத் தன்மையோடும் உண்மையான எதார்த்தத்தோடும் பதிவு செய்ய முயற்சி செய்து அதில் முழுமை அடைந்திருகிறார் ரா.கோ.வ. என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் முடிவு இன்னொரு தொடர்ச்சியாகவே இருக்கும் என கருதப்படுகிறது. பிரதாப் ரவி கதாபாத்திரதை ஏற்ற விவேக் ஓபராய் இறந்துவிட்டார்.
சூர்யா சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார்... விவேக் ஓபராயின் மனைவி கையில் இருக்கும் குழந்தை தான் படத்தின் கடைசி ஷாட். அப்படியென்றால் இன்னொரு ரத்த சரித்திரம்....!
நன்றி :நக்கீரன்
இது இன்னுமொரு நண்பரின் விமர்சனம்...
ஹிந்தி தெலுங்கு மொழிகளில் இரண்டு பகுதிகளாக வெளிவந்த கதையை ஒரே படமாக சுருக்கித்தந்திருக்கிறார் தமிழுக்காக!
இரண்டு சட்டி அளவுக்குக் கிண்டிய காரக் குழம்பை கொதிக்க வைத்தே ஒரு சட்டிக்கு வற்ற வைத்துப் பரிமாறியிருப்பதால்... காரம் காய்ச்சி எடுத்திருக்கிறது.... அதுவும் மசாலா காரமில்லை... அசல் மிளகாய்க் காரம்!!
டூ இன் ஒன் பழிவாங்கல் கதை! வில்லனும் ஒரு ஹீரோதான்... ஹீரோவும் வில்லனுக்கு வில்லன்தான்!!!
பழிக்குப் பலிவாங்க அரிவாள் தூக்கும் கதைகளின் யுனிவர்சல் விதிகள் இரண்டு உள்ளன...
ஒன்று... குத்திக் குடலறுக்கும் கத்திக்கு ரத்தருசி திகட்டிவிட்டாலும் பகையையும் பழியையும் மிச்சம் வைத்துவிட்டு வரக்கூடாது...
இரண்டு... பலிபோடும் படுகொலைக்களத்தில் பெண்களும் குழந்தைகளும் பலியாகக் கூடாது..!
புகை மூண்டதும் இருள் வந்து சூழ்வதுபோலவே பகை மூண்டதுமே அரசியல் வந்து சூழ்ந்துவிடுவதும் ஒரு நிகழ்கால நிதர்சனம்தான்...! தூக்கிவளர்த்த அப்பா நல்லவரோ கெட்டவரோ கண்முன்னே கொடூரமாய்க் கொல்லப்பட்டு சிதைந்த உடலாய்க் கிடக்கும்போது மகன் கத்தியைத் தூக்கத்தான் செய்வான் ரத்தம்பார்க்க... இங்கே முதலில் அரிவாள் தூக்கும் மகன் விவேக் ஓபராய்... அம்மாவின் கண்முன்னேயே கழுத்தில் அரிவாள் இறக்கிச் சாகடிக்கப்படும் அப்பாவைப் பறிகொடுக்கும் அடுத்த மகன் சூர்யா!! (வெட்டுபவன் விவேக் ஓபராய்!) சூர்யாவோ தானும் உடனே ஆயுதம் தூக்காமல் கொல்லத் துடிக்கும் தன் தம்பியையும் அடக்குகிறார் தன் அம்மா மற்றும் தங்கைக்காக.... ஆனால் பழிவாங்கலின் இரண்டாம் விதையை (!) ஓபராய் மீறிவிட யாருக்காக சூர்யா அடங்கிப்போகிறானோ அவர்களையே சிதறிப்போன துண்டுகளாய்க் கண்முன்னே பறிகொடுத்தபின் ஓபராயின் உயிரை வாங்குவதற்காக மட்டுமே மீதமிருக்கும் உயிரைப் பணயம் வைக்கிறான்..."சாகுறதுக்கு பயப்படவில்லை அவனை சாகடிக்காம செத்துவிடுவேனோன்னுதான் பயப்படுறேன்" என்று சூர்யா உருமும்போது அந்தக் கண்களில் ஜீவனே இல்லாத கொலைவெறி மிரட்டும்.... எதிரிகளையெல்லாம் வேரறுத்துவிட்டு அரசியலில் ஆலமரக்கன்றாய் விழுதுவிடும் முயற்சியில் இருக்கும் ஓபராய்க்கு எதிரியாய் வேர்விட்டு முளைக்கிறான் சூர்யா.... ஓபராய் பிழைத்தானா..... சூர்யா ஜெயித்தானா... அதுதான் ரத்தசரித்திரம்!!
சூர்யா....... "நேருக்கு நேர்" படத்திலும் இவரின் முகத்தில் இரண்டு விழிகள் இருந்தன!
ஒரு சங்குப் பாலில் மிதக்கும் ஒற்றைத் திராட்சையாக மிதந்த கருவிழி களங்கமில்லாத கண்ணில் அங்கும் இங்கும் உருண்டு கேமரா வெளிச்சத்துக்குக் கண்கூசி கலவரப்பட்டது! அதே சூர்யாவின் அதே பால்விழிகளில் நஞ்சைக் கலந்தது பாலாவா? கௌதமா? இல்லை ராம்கோபால் வர்மாவா?? காந்தசக்தியால் இழுத்து நிறுத்தியதுபோல் கொலைவெறி பளபளக்கும் கண்கள் குத்தி நின்று மிரட்டுவது முற்றிலும் புதிது! சூர்யவின் கண்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள கேமராவின் மெனக்கிடலை அந்தப் பார்வையின் இன்டென்ஸிட்டியைத் திரையில் காணும்போது புரிந்துகொள்வீர்கள்!
விவேக் ஓபராய்.... எதிர்பார்த்திருக்கவில்லை இந்த முகம் பாரித்தால ரவிபோன்றதொரு எக்ஸ்ப்ளோஸிவ் பெர்சனாலிடியாக இத்தனை பவர்ஃபுல்லாக வெளிப்பட்டிருக்கும் என்று... வெறியைக் காட்டுவதில் விவேக் ஓபராய் தன்னுடைய மேக்ஸிமம் பொட்டன்ஷியல் காட்டியிருந்தாலும் டிஸ்கவரி சேனலில் பார்த்திருக்கும் வேட்டைச் சிங்கப் புலிகளின் கண்ளில் எறியும் தீயைமிஞ்சும் பார்வையால் சூர்யா இவரை ஓவர்டேக் செய்துவிடுகிறார் என்றாலும் விவேக் ஓபராயின் கதாபாத்திரம் காட்டும் மெருகேறிய மெச்சூரிட்டி அபாரம்! இறுதிக்காட்சியில் திடீரெனக் கண்முன் தோன்றி நிற்கும் சூர்யாவை நோட்டம்விடும் காட்சியில் அந்தக் குட்டிக் கண்களால் தானும் ஏதோ செய்திருப்பார்! தனக்கெதிராக ப்ரியாமணி தேர்தலில் போட்டிபோடுகிறார் என்று தெரிந்ததும் தன் மீசையின் ஒற்றைமுடியை நறுக்கிப்போடும் அலட்சிய பாடிலேங்குவேஜ் செம வில்லத்தனம்!
சுதீப் கிடைத்திருக்கும் ரொம்பச் சிறிய வாய்ப்பிலும் தன்னுடைய மேன்லினஸ்ஸைக் காட்டியிருக்கிறார் ஆனால் இழுத்துவைத்து வீண்டிக்கப்பட்டிருக்கிறார் இந்த கன்னட ஸ்டார்! மேக்கப் இல்லாத இயல்பான பளபளப்பினால் ப்ரியாமணி கவர்கிறார் தன்னுடைய பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்... குத்துவிளக்கைப் போல ராதிகா ஆப்தே இரண்டு காட்சியில் மட்டும் நடக்க வாய்ப்பு... நிறைவாகத் துடித்திருக்கும் ஹோம்லி ப்யூட்டி! கிட்டி, கோட்டாசீனிவாசராவ், வித்யார்த்தி என எல்லாமே பெரிய டிக்கெட்டுகள் சின்னச் சின்ன சந்துபொந்துகளிலும் புகுந்து மிரட்டுகின்றனர் பெருசுகள்!!
ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தை ரசித்தேன்... நாட்டில் ஒரு காட்டுவாழ்க்கையைப் படம்பிடித்திருக்கும் மனிதர் இவ்வளவு ரா ஆக்ஷனை சாவுவிழுங்கும் தருணத்தின் விழிகளின் மிரட்சியாலும், வெறியில் ஆடும் முகத்தின் தசைகளாலும், ஒவ்வொரு கொலையின் வீரியத்தையும் வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தி புஜங்களைத் துடிக்கவைத்திருக்கிறார் பார்வையாளனுக்கும்! நடிகர்களை நம்பி க்ளோஸப் காட்சிகளாலேயே ஃபோர்ஸ் காட்டியிருப்பது AN RGV Film! என்று மார்தட்டுகிறது!
இசை... பாடல்களையே பின்னணி இசையாய்ப் பயன்படுத்தியிருப்பது படத்தைக் காப்பாற்றியிருக்கிறது (ஒரு பாடல்காட்சி இருந்திருந்தால் கூட படம் பப்படம்தான்!) அதைத்தவிர சொல்லிக்கொள்ளும்படி இசையில் ஒன்றும் இல்லை பட் பாஸ்மார்க் வாங்கியிருப்பது நிதர்சனம்..... ஃபெயிலாவது ரதோட்டின் ஒளிப்பதிவுதான் :-( க்ளோஸ் அப் காட்சிகளில் துல்லியத்தைத் தவரவிட்டிருக்கிறார்.... கோணங்களில் இயக்குனரின் கண்ணாக அவதனித்து இருந்தாலும் ஆழப்பார்வையைக் காட்ட சரியான லென்ஸ்களைப் பயன்படுத்தத் தவறவிட்டுவிட்டாரோ எனத் தோன்றுகிறது.... சூர்யா- விவேக் ஓபராய் சந்தித்துக்கொள்ளும் காட்சியில் இருட்டுடன் கைகோர்த்து விளையாடியிருப்பதை மட்டும் ரசிக்கமுடிகிறது... சூர்யாவின் கண்களிடம் கேமரா தோற்றுப்போகிறது... ரதோட் கலர் மற்றும் ஷேட்களுடன் இன்னும் கொஞ்சம் தனித்துவமாக வெளிவந்திருந்தால் ரத்தம் இன்னும் சூடாகக் கொத்திருக்கும்.....
எடிட்டிங் மிக நன்று... இரண்டு திரைக்கதைகளாக எழுதி இயக்கிவிட்டு மீண்டும் எடிட்டர் ரூமில் உட்கார்ந்து கத்திரிபோட்டு ஒரு திரைக்கதையாய் எப்படித்தான் வடித்தாரோ ஆர்ஜிவி! இருப்பினும் மாறிமாறி வெட்டுவதும்... ஸ்கெட்சுகூடப் போடாமல் சினிமாத்தனமாக அடுத்தடுத்து போட்டுத்தள்ளுவதும் நிச்சியம் டெம்போ குறைந்து நெழியவைத்துவிடுகிறது.... ஸ்லோமோஷன் காட்சிகளையெல்லாம் நார்மல் ஸ்பீடில் காட்டியிருந்தால் படத்தின் நீளம் பாதியாய்க் குறைந்திருக்கும்! அந்தளவுக்கு படம்முழுக்க ஒன் பை டூ ஸ்பீடில்தான் நகர்கிறது.... அடிக்கடி தலைகீழாகக் சுழலும் கேமரா ஆமைவேகத்தில் சுழன்று கழுத்தை நெறிக்கிறது... ஒரு கேமரா யுக்தியாக முயற்சி செய்திருக்கும் விஷயம் தியேட்டர் ஆபரேட்டரின் தவறோ என்று யோசிக்க வைப்பது அபத்தம்!
பழிவாங்கலைப் படம் வரைந்து விளக்குவதற்கு இந்திய சினிமாவின் ரைட் பர்சன் ராம்கோபால்வர்மாதான் என்று மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் என்று சொல்லமுடியும்.... அவ்வளவுதான்!
நான் பல காட்சிகளை ரசித்தேன் சில சமயம் நெழிந்தேன்... சூர்யாவை மட்டுமே முழுக்க முழுக்க வெறித்து ரசித்தேன்... அடுத்த சூர்யாவின் படத்துக்கு அநேகமாக அவர் திரையில் தோன்றும் முதல்காட்சிக்கு விசில் அடிப்பேன் என்று நினைக்கிறேன்...!
மீண்டும் ஒருமுறை.....
இது சூர்யாவின் விழிக்கூர்மையில் ரத்தம் தொட்டு எழுதப்பட்டிருக்கும் ஓர் உண்மை சரித்திரம்!
ரத்தசரித்திரம் - Worth watching but watch at your own risk... ;-)
நன்றி : பிரபு
Category: THIRAI VIMARSANAM
0 comments