தென்மேற்குப் பருவக்காற்று (Thenmerku Paruvakaatru) 2010 - திரை விமர்சனம்
நடிக+நடிகைகள்:-சேதுபதி(அறிமுகம்), வசுந்தரா சிபெட்ரா, சரண்யா பொன்வண்ணன், கலைச்செல்வி ஹேமலதா(அறிமுகம்), "தீப்பெட்டி"கணேசன், "காதல்"சுகுமார் மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் பலர்.
இசையமைப்பு:-என்.ஆர்.ரஹ்நந்தன்
பாடல்கள்:-வைரமுத்து
தயாரிப்பு:-"கப்டன்"சிபு இஷாக்
கதை+திரைக்கதை+வசனம்+இயக்கம்:-சீனு ராமசாமி
தமிழில் நல்லபடம் வருவதில்லை!! நல்லப்படமா இருந்தா அது காப்பி அடிச்சது!! தமிழ் சினிமாவே கார்ப்பரேட் கம்பெனிகள் கையில் இருக்கிறது இப்படியெல்லாம் வக்கணையாக பேசும் நாமும் அதே கார்ப்பரேட் கம்பெனிகள் தரும் சுமாரான படங்களைத்தானே முதலில் பார்க்க ஓடுகிறோம்??
குவிந்து கிடக்கும் கூழாங்கற்கள் இடையே ஒழிந்து இருக்கும் வைரங்களைப்போல தமிழ் சினிமாவில் நல்லப்படங்கள் வராமல் இல்லை!! அப்படி வந்தாலும் வசதி படைத்தவர்களின் (Sun Net Work என்று நான் யார் கிட்டேயும் சொன்னேனா?? இல்லத்தானே???) விளம்பரங்களின் முன்பு மறைக்கபட்டு விடுவது தமிழ் சினிமாவை உயிருடன் புதைக்கும் நிகழ்வு.
ஆனால் வாழ்வியலுக்காகவும் ரத்தமும் மண்ணுமாக மண் மணத்தை சொல்லிய நல்ல படங்கள் தோல்விப்படங்களாக மாறி அந்த இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பிட்டு படம் எடுக்கும் நிலைக்கு மாற்றி விடுகிறோம்.விமர்சனம் எழுதாமல் நாங்கள் இதை எழுத காரணம் இல்லாமல் இல்லை இந்த நல்லப்படத்தை என்னுடன் பார்த்தவர்கள் 13 பேர்.
படத்தில் ஆடு மேய்ப்பவர் ஹீரோ.அம்மா பார்த்த பொண்ணுடன் வாழ ஒப்புக்கொண்ட நிலையில் தன் பட்டியில் இருந்து ஆட்டைத் திருடும் போது கதாநாயகியை சந்திக்கிறார்.பிறகு கதாநாயகன் காட்டிகொடுப்பதால் ஆட்டைத்திருடிய கதாநாயகியின் குடும்பம் மொத்தமும் ஜெயிலுக்கு போகிறது.இதன் பிறகு நாயகனும் & நாயகியும் மனதால் நெருங்குகிறார்கள்.இருவர் வீட்டிலுமே எதிர்க்கிறார்கள்.அவளை வேண்டாம் என்று சொல்ல சரண்யாவிற்கு ஒரு அழுத்தமான ப்ளாஷ் பேக் இருக்கிறது காதலின் முடிவு வெண்திரையில் காண்க.
படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் கதையின் யதார்த்தத்தை அருமையாய் சொல்கிறது.படத்தில் நாயகனுக்குத்தான் கனம் குறைவான பாத்திரம் கதாநாயகி வசுந்தரா அம்மாவாக சரண்யா, வசுந்தராவின் அண்ணன் தீப்பெட்டி கணேசன் அனைவருமே படத்தின் தூண்களாக இருக்கிறார்கள்.
படத்தில் புழுதிகளின் நடுவே நாமும் வாழும் உணர்வைத்தருகிறார் இயக்குனர்.நாயகனுக்கு முதலில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக வருபவரும் அவரின் அப்பாவாக வருபவரும் வாழ்ந்திருக்கிறார்கள். படத்தில் பாராட்ட எவ்வளவோ இருக்கிறது.சீனு ராமசாமி படத்தின் பல இடங்களில் இயக்குனாராகவும் வசனகர்த்தாவாகவும் நிறைய இடங்களில் நம்பிக்கைத்தருகிறார்.
தன் மகனுக்கு பெண்ணை நிச்சயம் செய்யும் இடத்தில் தன் கணவனின் சாட்சியாக தன் கணவன் தனக்கு இறக்கும் போது கொடுத்த சங்கை வெத்தலையுடன் வைத்துகொடுப்பதும் அதை இறக்கும்போது தன் மகனுக்கு கொடுப்பதும் உறவுகளின் அன்பு பரிமாற்றம்.தன் மகளை நிச்சயித்து விட்டு அவனுக்கு வேறு பெண்ணைப்பார்த்து திருமணம் செய்த பின்பும் அந்த தம்பி உறவு அவளின் இறப்பில் வந்து தலையில் அடித்துக்கொண்டு அழும் காட்சி நெகிழ்ச்சி.
குத்துப்பாட்டு இல்லை, யதார்த்தம் மீறிய காதல் காட்சிகள் இல்லை, டூயட் இல்லை, பஞ்ச் வசனம் இல்லை, பறந்து பறந்து அடிக்கும் சண்டைகள் இல்லை, பெரிய கதாநாயகன் நாயகி இல்லை, காமெடிக்கு தனி ட்ராக் இல்லை, கவர்ச்சி இல்லை, தமிழ் சினிமாவின் வெற்றி பார்முலா வென்று சொல்லும் எதுமே இந்தப்படத்தில் இல்லை ஆனாலும் ஒரு தரமான படத்தை நமக்கு தந்திருக்கிறார் சீனு ராமசாமி. இந்தப்படத்தில் பங்கு பெற்ற ஒவ்வொருவரும் தன்னுடைய சிறந்த உழைப்பை இந்தப்படத்திற்காக தந்திருக்கிறார்கள்.
குறைகள் இல்லாமல் இல்லை!! முதல் பாதியில் கதை நகர்வு மெதுவாக இருக்கிறது, காதலில் அழுத்தம் இல்லை, மேலும் சில குறைகளை சொல்லலாம்.ஆனால் அவை எல்லாம் எதுவும் பெரிது படுத்திப்பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.
Category: THIRAI VIMARSANAM
0 comments