VILAI (விலை) 2010 - திரை விமர்சனம்
பரணி, ரீத்து, உதயதாரா, சரவணன், பாத்திமா, பானுசந்தர், சந்துரு, சாதிகா
டி.இமான்
இயக்கம்
ஜீ.காமராஜ்
தயாரிப்பு
சத்யா, பாபு
அடிக்கடி சண்டை போட்டாலும் பாசக்கார அண்ணன், தங்கை பரணியும், ரீத்துவும். தங்கைக்கு அப்பா திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும்போது, சென்னையில் மேற்படிப்பு படிக்க அழைத்து வருகிறார் பரணி. அப்போது சென்னையில் பெண் கடத்தும் கும்பலிடம் தங்கையை பறிகொடுக்கிறார். தங்கையை கடத்தியதைப் பற்றி காவல் துறையிடம் புகார் கொடுக்கும் பரணி, ஒரு கட்டத்தில் காவல் துறையை நம்பாமல் தானே தேட முன் வருகிறார். இந்த தேடலில் தன் தங்கையை கடத்திய கால் டாக்ஸி ஓட்டுனரை பிடிக்க, இவர்களுக்கு நடுவே பெரும் மோதல் ஏற்படுகிறது. அந்த மோதலில் பரணியை காப்பாற்றும் காவல்துறை அதிகாரி சரவணன், பரணியின் பிரச்சினையை அறிந்து அவருக்கு உதவ முன்வருகிறார்.
கால் டாக்ஸி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு செல்போன் நம்பரைத் தவிர வேறு எந்த தகவலும் சரவணனுக்கு கிடைக்காத நிலையில், அந்த செல்போன் நம்பரை மட்டும் வைத்துக்கொண்டு, கடத்தப்பட்ட பெண்ணையும், கடத்தல் கூட்டத்தையும் எப்படி பிடிக்கிறார் என்பதே படத்தின் இறுதிக்காட்சி.
ஆரம்பத்தில் இரண்டு ரீல் கலகலப்பாக செல்லும் படம் அதன் பிறகு சக்கரம் கட்டிக்கொண்டு பிரச்சினை நோக்கி செல்கிறது. கடத்தல், விசாரணை, நடவடிக்கை என நம்மையும் பின்னே அழைத்துச்சென்று பார்க்க வைக்கிறார் இயக்குநர். பரணியின் தங்கை கடத்தப்படும் காட்சிக்குப் பிறகு விறுவிறுப்பாக நகர்கிறது. ஒரு பக்கம் காவல்துறையின் விசாரணை, மறுபக்கம் கடத்திச்செல்லப்படும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் என படத்தின் திரைக்கதை திகட்டாமல் நகர்கிறது.
சுப்பிரமணியபுரம், நாடோடிகள் பட பரணிக்கு இந்தப் படத்தில் தனி கச்சேரி நடத்துகிற வாய்ப்பு. ஓவராக உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். ஆர்வக்கோளாறு. வில்லன் குடும்பத்துக்கு காரோட்டியாக வருகிற சந்துருவுக்கு நல்ல பாடி. நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.
சண்முகவேல் பாத்திரத்தில் உதவிகமிஷனராக வந்து அதிரடி நடவடிக்கையால் படத்தை வழி நடத்திச் செல்கிறார் சரவணன். அவரது இயல்பான நடிப்பு எடுபடுகிறது. மகள் மீது அவர் ஏங்கும் காட்சிகள் தந்தையின் பாசத்தை வெளிப்படுத்துகிறது. அவரது மகளை கடத்தும் பரூக் மரைக்காயர் வேடத்தில் வரும் 'யோகி' தேவராஜ், சவால் விடும் இடத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
டி.இமானின் இசையில் 'மன்மதக்காடு' என்ற பாடல் முனுமுனுக்க வைக்கிறது, ஒளிப்பதிவாளர் பிராபகர் படம் முழுக்க கேமராவை கையிலே வைத்து இயக்கியிருப்பார் போலிருக்கிறது, அத்தனை சேக்கிங்.
த்ரிலிங்கான கதைக்களத்தை தேர்வு செய்த இயக்குநர், அதை படமாக்குவதில் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். கோட்டை விட்டிருக்கிறார். சரி! அடுத்த படத்திலாவது ரசிகர்களை திருப்திப்படுத்துவார் என்று நம்புவோமாக!
விலை - விலைமாதர்களின் நிலை!
Category: THIRAI VIMARSANAM
0 comments